விருஷ்ணித்தாய்!

January 16th, 2011 | angaisnet

உலகின் மிக சந்தோஷமான தருணம் எது தெரியுமா? இளங்காலையில் பசுவின் பால்கன்று கயிறவிழ்த்து துள்ளாட்டம் போடுவதைப் பார்ப்பது! கன்றுக்குட்டிக்கு கவலையில்லை! மோகக் குழப்பங்களில்லை! பற்றில்லை! அது துள்ளுவது யோகம்! ஓடுவது தியானம்! அது காண்பதெல்லம் அதற்குப் புதியன!

இதோ இந்த வெளிர் மெரூன் கலர் கன்றுக்குட்டி இருப்பதையெல்லாம் கவிழ்த்துப்போட்டு துள்ளி வருகிறதே, இந்த முற்றமோ, அதை அடுத்த வீடோ, வீட்டின் கதவு எண்ணோ, எண்ணின் முகவரியோ, முகவரியின் ஜூரிஸ்டிக்ஷனோ எதுவும் நமக்கு முக்கியமில்லை. கன்றும், அதன் பசுதாயும், தாயின் மனங்கவர்ந்த அந்த வீட்டின் பைங்கிளி, பதினாறு வயது ஆனந்தியும் நமக்கு முக்கியம்.

இதோ, இப்போது கூட ஆனந்தி கதவைத் திறந்து காய் கனி தோலியோடு சிறிது செம்மண்ணும் சாணமும் கலந்து எருக்குழி நோக்கிச் செல்லும்போது, துள்ளி வந்த கன்றுக்குட்டி, அவள் இடுப்பில் மோதியது. கீழே விழுந்த ஆனந்தியின் சட்டை பாவாடையெல்லாம் சாண செம்மண் அபிஷேகம்!

தொழுவத்திலிருந்த தாய்ப்பசு பதறியது! ஜன்னலில் பார்த்து யாரோ சிரித்தார்கள். பொய்க் கோபத்துடன் எழுந்த ஆனந்தி, இழுத்து செருகிக்கொண்டு கன்றைத் துரத்தினாள்! தாய்ப்பசு மகிழ்ந்தது! நடக்கும் போட்டியில் யார் ஜெயித்தாலும் அதற்கு மகிழ்சியே! துரத்துவது அதன் விருஷ்ணித்தாய்! அதனைப் பராமரிக்கும் மகராசி! துரத்தப்படுவது, தாய்ப்பசுவின் செல்ல மகள்.

ஆனந்தி கன்றைப் பிடித்து நாலு சாத்தியிருப்பாள். ஆனால் அதற்குள் அது கஞ்சிப்பானை முதற்கொண்டு பூந்தொட்டிகள், தண்ணீர்க் குடங்கள் அனைத்தையும் கவிழ்த்துவிடும். எனவே, *இரு, இரு உன்னை அப்புறம் பாத்துக்கறேன்* என்று கறுவிக்கொண்டே பசுவிடம் வந்தாள்.

பசுவை அவிழ்த்து வெளியே முளையில் கட்டினாள். உண்ணி நீக்கினாள். நல்ல பிள்ளை போல நெருங்கி வந்த கன்றைப் பால் குடிக்க விட்டாள். கன்றையும் பசுவையும் ஒரே நேரத்தில் விரல்களால் கோதிவிட்டாள். பசும்புல் கட்டிங்ஸ் மற்றும் சோளத்தட்டையும் கலந்து சிறிது போட்டாள். கலப்புத் தீனியையும் ஊறவைத்த பிண்ணாக்கும் கரைத்து பசுவின் முன் வைத்தாள்.

சரியாக ஒரு நிமிடம் காத்திருந்த ஆனந்தி, கன்றை இழுத்து பசுவின் முகத்தருகே அரையடி கயறு விட்டு கட்டினாள். நீர் தெளித்து மடியைக் கழுவி, எண்ணெய் தடவி, ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் சரட் சரட்டெனப் பால் கறக்க ஆரம்பித்தாள். அவளுக்குத் தெரியும். கன்று துள்ளாட்டம் போட்டது, தான் அதை ச்செல்லமாகத் துரத்தியது, கன்றை பால் குடிக்கவிட்டு கோதிவிட்ட மசாஜ், பால்குடி மாறாக் கன்றை அதன் தாய் நக்கிக்கொண்டிருப்பது இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே பாலின் வேகம் நேற்றைவிட இன்று கூடியிருக்கிறதென்று.

(மென்மையான இதயமுடையோர், கவிதை நீதி பார்ப்போர், ஆப்டிமிஸ்ட்டுகள் இந்த இடத்தில் கதையிலிருந்து விலகிவிடவும்)

வழக்கமான நேரத்தைவிட இன்று அதிக நேரம் பால் கறந்ததால் கன்று பசியில் தத்தளித்தது. தாயிடம் கேட்டது, *அம்மா, இன்று எனக்கு பசி அதிகமாயிருக்கிறதே அம்மா?*

*ஆம் கண்ணே! இன்று அதிகம் குதித்தாய். ஓடினாய். நாளை இன்னமும் பசி அதிகரிக்கும்*

*இன்று ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறாள் இந்த ராட்சசி?*

அவள் விருஷ்ணி குலத் தோன்றல். என் தாய்! நாளை உனது தாயாவாள்! அவளை அப்படிச் சொல்லாதே. உன் பால் குடி மறக்கவே அப்படிச் செய்கிறாள். நீ இன்னமும் பால் மட்டும் குடித்துக்கொண்டிருந்தால் பசும்புல் கடிக்க மாட்டாய்*

*நான் ஏன் பால் மறக்க வேண்டும்? நான் என்ன அவள் தாயிடமா சென்று பால் குடிக்கிறேன்? என் தாயிடமிருந்து பிரித்துக் கட்ட இவள் யார்? வேண்டுமென்றால், அவளைப் போய் புல் தின்னச் சொல்*

*ஹேய், உனக்கென்ன ஆச்சு இன்னைக்கு?*

*பின்னென்னம்மா?…..* என்று ஏதோ சொல்ல முனைவதற்குள் ஆனந்தி அதை அவிழ்த்து விட்டாள். ஆவலாய் ஓடி மடி முட்டிய கன்றிற்கு ஏமாற்றம். *பார்த்தாயா அம்மா? ஆழாக்குப் பால்கூட விட்டுவைக்கவில்லை அந்தக் கடங்காரி*

*அப்படிச் சொல்லாதே கண்ணே. நாம்தான் அவளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். ஈரோட்டுக் கலப்புத் தீவனம், ஆயில்பட்டிப் பிண்ணாக்கு, கோரெண்டு புல், கவண்டல் தழை, அகத்திக் கீரை, கிருமி நீக்கிய மேட்டூர் குடிநீர் என நம்மை எப்படி போஷிக்கிறாள் தெரியுமா?*

*ஒரு லிட்டர் பாலை இருவது ரூவாய்க்கு விற்கிறாள் அது தெரியுமா உனக்கு?*

*கன்றே, பணமிருந்தால்தான் வைக்கோல், இந்த தொழுவம், நம் மருத்துவ செலவு, இவற்றைச் செய்யமுடியும். அது போகட்டும். உச்சி வெய்யிலில் நம்மை குளிர் நீராட்டி சேவை செய்கிறாளே, அதற்கு என்ன விலை கொடுப்பது?*

*இந்த இளிச்சவாய்த்தனம்தான் நம்மை அடிமைத்தனத்தில் கொண்டு விட்டிருக்கிறது. யாருக்கு வேண்டும் இவளது சேவை? நாம் சுதந்திரமாய் இருந்தால், சுய சேவை புரிந்துகொள்வோம்*

*இப்போதும் நாம் சுதந்திரமாகத்தானே இருக்கிறோம்?*

*பூரண சுதந்திரம். மூக்கணாங்கயிற்றைத் தவிர! அது போகட்டும். நம்மிடமிருந்து எதையம்மா இவள் விட்டு வைத்திருக்கிறாள்? பால், இவள் குடிப்பதற்கு. சாணம், வீடு மெழுக, பூஷணிப்பூ வைக்க, எருவாட்டி தட்ட, எருக்குழியில் உரமாக்க, பயோகேஸாக அடுப்பெரிக்க. நம் மூத்திரம், இவளுக்குக் கோமியம். நம் கொம்பு, இவளுக்கு அலங்காரப் பொருள். நம் தோல், இவளுக்கு செருப்பு*

*நம்மை விலை கொடுத்து வாங்கிய மகராசிக்கு, நம்மை முழுமையாய்ப் பயன்படுத்த உரிமையுண்டு*

*இதுதான் பக்கா கொத்தடிமைத்தனம்*

*கன்றே, ஆனந்திக்கு நம் மீது அன்பில்லை என்கிறாயா? அன்பில்லாமலா அவள் எனக்கு யோகலஷ்மி என்று பேரிட்டிருப்பாள்?*

*ஆமாம். நீயிருப்பதால், யோகம் அவளுக்கு! இந்த வீட்டின் இரண்டு பக்க காம்பவுண்ட் சுவரையும் எட்டிப்பார். இந்தத் தெருவிலுள்ள அத்தனை பேரும் தன் மாட்டிற்கு லட்சுமி என்றுதான் பெயரிட்டிருக்கிறார்கள். உனக்கு வெட்கமாயில்லை? அவ்வளவு ஏன்? இன்று என் தோலின் மென்மையையும் வழவழப்பையும் வைத்து என்னை *பாலியஸ்டர்* என்று கொஞ்சும் இதே ஆனந்தி, நான் வளர்ந்ததும் எனக்கும் லட்சுமி என்றுதான் பேர் வைப்பாள்*

*இப்போது நீ என்னதான் சொல்கிறாய்?*

*அவள் வீட்டை அவள் வீட்டார் போட்ட சாணியிலேயே மெழுகிக்கொள்ளச் சொல்கிறேன். ஏன் முறைக்கிறாய்? நாம் இயற்கையோடு ஒன்றி, நமக்குரியதை உண்கிறோம். ஆனால் மனிதன், தனக்குரிய பழங்களையும், நீர்ப்பருப்பையும் விட்டுவிட்டு, எலிகளுக்குரிய தானியம், பன்றிக்குரிய கிழங்கு, ஆட்டுக்குரிய கீரை, புலிக்குரிய மாமிசம், இவற்றை இயற்கைக்கு எதிராக சமைத்து உண்கிறான். எனவேதான் அவன் மலம் மட்டுமல்ல, அவன் கும்பிவாடை கூட துர் நாற்றம் வீசுகிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே மற்ற மிருகத்தின் பாலைக் கறந்து குடிக்கும் கேவலம் எந்த இனத்திலம்மா நடக்கிறது? குளம்பு விட்டுச் சொல்லம்மா?*

*கன்றைத் தன் தேரின் காலில் நசுக்கிவிட்ட பட்டத்து இளவரசனை, அதே தேரை ஏற்றிக் கொன்று, நீதியை நிலை நாட்டினானே ஒரு மன்னன்…….!*

*இதையே சொல்லிக்கொண்டு அதன் பின்னர், கோடி மில்லியன் மாடுகளை வெட்டி டின்னில் அடைத்துவிட்டார்கள்*

*நம் காலகால முன்னோர்களின் சிறு ஞாபகத் தீற்றல்களின் ஒட்டுமொத்தக் கொத்து ஒன்று, ஜெனடிக்ஸ் ஏணி வழியாகப் பெர்கொலேட் ஆகி, உன் ஜீன்களில் புகுந்திருக்க வேண்டும்! நீ ஒரே நாளில் இவ்வளவு நன்றி கெட்டவளாயிருக்க முடியாது!*

*நான் நன்றி கெட்டவளா? நாளை நான் பருவமடைவேன். கருத்தரிப்பேன். குட்டி ஈனுவேன். அது பெட்டையென்றால் முடையடித்து, பொலிகாளை வந்து பொலிந்து, அடிமையாவாள். காளையென்றால் காயடிக்கப்பட்டு, பொதி சுமப்பான். என் வாரிசு, பொதியோ, இல்லை பொலியோ சுமக்க நேரிடுமே என்று நான் பதறுவது, நன்றி கெட்ட செயலா?*

ஒரு வருடம் ஓடிப்போனது. கன்று வளர்ந்து, முடையடித்து வேறு விதமாய்க் கத்தியது. அன்று ஏதோ விசேஷ தினமாகையால், பட்டுப் பாவாடை, தாவணியில் இருந்த ஆனந்தி, வழக்கம்போல் தொழுவத்திற்கு வந்தாள்.

*ஏய், ஆனந்தி, உள்ள போ* என்றான் அவள் அண்ணன்.

*மாட்டேன்* என்றாள் பதினேழு வயது ஆனந்தி.

*நம்ம ஞான லட்சுமி ராத்திரிலேர்ந்து முடையடிச்சு, கண்ணாடி ஒழுக்கி, கத்துது. காங்கேயன் காளையைப் புடிச்சு வந்திருக்கான் தம்பி. லட்சுமியை ஊசி போடற வளையத்துல கட்டியாச்சு. நீ உள்ள போ*

*ஞானலஷ்மி அழுதா நான் தொடச்சி விடறேன்* என்று சிரித்துக்கொண்டே வளையத்தின் முன்பக்கம் வந்தாள். *ஹேய், பாலிஸ்டர்!* என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அன்று விசேஷத்திற்கு வந்திருந்த அத்தை, ஆனந்தியை காரணமேயில்லாமல் அழைத்து அருகில் அமர்த்தி வாசம் பார்த்தாள். ஆனந்திக்கு, காங்கேயன், லட்சுமியை முகர்ந்தது ஞாபகத்தியது.

அத்தைப் பையன் கொயம்பத்தூரில் விவசாயம் படிக்கிறான். இருபத்திரண்டு வயது. ரெட்டைப்படையில் செய்யக்கூடாதாம். அடுத்த வருடம் முடித்துவிடலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.

மேலும் ஒரு வருடம் ஓடிப்போனது. டெம்போ ஒன்று தொழுவத்தின் வாசலுக்கே வந்தது. மஞ்சள் கயிறு கழுத்துடன், பட்டுப் புடவையை இழுத்துச் செருகிய ஆனந்தி, முளையின் கயிறவிழ்த்ததும், ஞான லஷ்மி அடக்கமாகச் சென்று டெம்போவில் ஏறிக் கொண்டது. தாய்ப் பசுவைத் திரும்பிப் பார்த்தது.

*என்ன ஆனந்தக் கண்ணீரா? தண்டவாளப் பெட்டி, காமாட்சி விளக்கு மாதிரி என்னையும், என் பெண்ணையும் சீதனமாகக் கொண்டு போகிறாள்! உயிராக அல்ல. பொருளாக! தன் குழந்தைக்குப் பால் தர திராணியற்ற இவர்கள், நம்மைக் கடவுளாக்கி, கோமாதாவாக்கி, கோதானம் என்று சொல்லி, அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

மனிதன் யாரென்று அவனுக்குத் தெரியாமல் போயிருக்கலாமம்மா! ஆனால், இவன் கூடவே ட்ரில்லியன் வருடங்களாய்ப் பயணித்து வரும் நமக்குத் தெரியுமே அம்மா, இவன் எதிலிருந்து வந்தான் என்று? இவன் திடீரென்று ஒருநாள் ஆடை அணிந்து, மனம் என்ற ஒன்றை அடைந்த நாளிலிருந்துதானே நாம் இவனுக்குக் கடவுளாகிவிட்டோம்? அதுவரை, இவனும் நாமும் ஒரே குட்டையில் யுகாந்தகாலமாய் ஊறிய மட்டைகள்தானே?

என்னால் முடியாமல் போயிருக்கலாம்! ஆனால் என் மன எதிர்காலத்தில், ஒருநாள் ஒரு பசு முளை ஒடிக்கும்! ஒரு காளை கயிறருப்பான்! மில்லியன் வருடம் என்பது பரிணாம கடிகாரத்தில் ஒரு வினாடிதானம்மா! யார் கண்டது? அந்தக் காலம் வரும்போது, இந்த விருஷ்ணி குலமே புலம் பெயர்ந்தோ, புல் முளைத்தோ போயிருக்கும்*

புடவையை இழுத்துச் செருகிய ஆனந்தி, *ஹேய், டெர்லின் ! நில்லுடி* என்று துரத்த, அந்தப் பால்கன்று, புழக்கடையிலிருந்த கழுநீர்ப்பானை, பூந்தொட்டி, தண்ணீர்க் குடங்களையெல்லாம் கவிழ்த்துப்போட்டு ஓடியது.

உலகின் மிக சந்தோஷமான தருணம் எது தெரியுமா? இளங்காலையில் பசுவின் பால்கன்று கயிறவிழ்த்து துள்ளாட்டம் போடுவதையும், அதனைப் புதுமண விருஷ்ணித்தாய் துரத்துவதையும் பார்ப்பது!

மரப்பாச்சி கட்டையும் நல்லதங்காள் செருப்பும்

December 10th, 2010 | angaisnet

பிசாசினைப்போல் சிரித்த கிழவியைக் கண்டு அந்தக் குழந்தை பயப்படவேயில்லை. ஆனால் “உன் கல்யாணத்தன்னைக்கு மழை கொட்டும்” என்று சொன்னதைக் கேட்டு கோவென்று அழுதது!

பாலாஷ்டமி, நடமாட்டம், கொறக்களிபிடி எல்லாவற்றிற்கும் பாடம் போடும் கிழவி அவள். கை சூப்பும், அரிசி தின்னும், பாச்சி குடிக்கும் குழந்தைகளின் பழக்கங்களை போக்கடிப்பவள். குழந்தை எவ்வளவு அழுதாலும் அவளுக்குக் கவலையில்லை. இடுப்பில் தூக்கி வைத்து மாடத்திலிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாய் காட்டி கதை சொல்லி, குழந்தையின் கண்களை விரிய வைப்பாள்!

“இந்தா இருக்கு பாத்தியா? மரப்பாச்சி பொம்மை! இதோட ஜோடி காணாமப் போச்சு.”

“ஆருது இந்த பொம்மை?”

“உன்னை மாதிரியே ஒரு கொழந்தையோடது”

“அந்தப் பாப்பா எங்க?”

“பூமணி பாப்பா, தண்ணியில மூழ்கி செத்துப்போயிட்டா”

அழுகையை நிறுத்தியிருந்த குழந்தை, கிழவியின் முகத்தையே பார்த்தது.

“கிணத்து மீனுக்கெல்லாம் மூச்சு முட்டுது! ஏந்தெரியுமா? பூமணியோட அம்மா நல்லதங்காளோட கூந்தல் கேணியெல்லாம் விரிஞ்சு மூடிக்கெடக்கு! கயிறு கட்டி தூக்கவுந்தான் பூமணியோட சேர்த்து மூணு கொழந்தைங்களும் மெதக்குறது தெரியுது! இதோ, இதுதான் அன்னைக்கு பூமணி கையிலிருந்த மரப்பாச்சி கட்டை. அது பக்கத்துல இருக்கறது அவ அம்மா நல்லதங்காளோட செறுப்பு”

”இவ எப்புடி தண்ணீல விழுந்தா?”

“ஆத்தாளும் மகளும் பொம்மையும் ஒருத்தரையொருத்தர் இழுத்துக்கிட்டுதான் விழுந்திருப்பாளுக!” களுக்கென்று சிரித்த கிழவி திடீரென ஆவேசமானாள்!

“மாமியா ஏசுனா புருசங்கிட்ட போவா, அவனும் திட்டுனா ஆத்தா வீட்டுக்கு போவா. அப்பனும் ஆத்தாளும் போய் சேந்துட்டா பொறந்தவன்கிட்டதானே போவா? அவன் கண்டுக்கவே இல்லைன்னா? உன்னோட பொறந்தவன், அதான் உன் அண்ணாங்காரன் உன்னை உதாசீனம் பண்ணுனா நீயும் போய் கேணியில குதிப்பியா?”

குழந்தை மூக்குறிஞ்சிக்கொண்டே மரப்பாச்சி கட்டை பொம்மையைக் காட்டியது.

கேஷுவேலிட்டி லேடி டாக்டர் வெளியே வந்து ரெண்டு பக்கமும் பார்த்தாள்.

“இவரோட பொஞ்சாதி யாரும்பா?”

”நாந்தாம்மா, சொல்லுங்க! ஏம்புருஷனுக்கு என்னாச்சும்மா?”

”எதுக்கு அழறீங்க? சி.டி ஸ்கேன் ரிசல்ட் வந்தாச்சு. மண்டைக்குள்ள மூளையைச் சுத்தி கெட்ட ரத்தம் சூழ்ந்திருக்கு. பைலேட்டரல் ஹெமட்டோமா. அதான் டபுள் விஷன். எல்லாமே அவருக்கு ரெண்டு ரெண்டாத் தெரியுது”

“பெரியாயீ, அங்கம்மா!”

”அட, பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை. சின்னதா ரெண்டு ட்ரில் போட்டு பர்ஹோல் வழியா உறிஞ்சு எடுத்துறலாம்.”

விஷயம் கேள்விப்பட்டு புகுந்தவீட்டு சனம் ஒவ்வொருத்தராய் வர ஆரம்பித்தார்கள். யாரோ போய் அட்வான்ஸ் கட்டி வார்டுக்கு மாற்றினார்கள். ரத்தம் எடுத்து டெஸ்டுக்கு கொண்டுபோனார்கள். பக்கத்து படுக்கை நோயாளியிடம் செல்ஃபோன் வாங்கி சென்னையிலிருக்கும் தம்பிக்கு முயற்சி செய்தாள். ரிங் முடியும்வரை எடுக்கவில்லை. அவள் தம்பி, ஒரு கைரேகை எஸ்.டி.கே நெட்வொர்க்கில் பிஸியாக இருந்தான்.

அவள் புருஷனை பாத்ரூமிற்குள் அழைத்துப்போய் தலையை சுத்தமாக மொட்டையடித்தார்கள். நரம்பு தேடி இன்ட்ராவெயின்ஸ் திரவம் சொட்டு சொட்டாய் இறக்கினார்கள். ஒரு நர்ஸ் வந்து சிரித்தபடியே கை எரிய எரிய ஆன்டிபயாட்டிக் ஊசி போட்டுவிட்டுப் போனாள்.

தக்கலையிலிருந்து வந்திருந்த அவளுடைய மச்சாந்தாரர் பொஞ்சாதியிடம் திரும்பவும் போன் வாங்கி தம்பி நம்பருக்கு போட்டாள். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. பயோமெட்ரிக் சிஸ்டம்களை இணைக்கும் டிஜிட்டல்பெர்ஸொனா, மெகாமேட்சர் ஆகிய மென்பொருள் நிபுணர்களுடன் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். ஆஸ்பிடல் ட்யூட்டி முடிந்து கிளம்பிய வார்டுபாயிடம் அவள் தம்பியின் சென்னை அட்ரஸ் கொடுத்து தந்தி அடிக்கச் சொல்லி பணம் கொடுத்தாள்.

காலையில் இனிமா கொடுத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் அவள் கணவனை அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே அவள் தம்பியிடமிருந்து போன் வந்திருப்பதாய் ஃப்ளோர் ஆபீசிலிருந்து வந்து கூப்பிட்டார்கள்.

“தம்பி, எனக்கு பயமா இருக்குப்பா! உன் மாமனோட தலையில ஓட்டை போட்டு கெட்ட ரத்தம் எடுக்க உள்ள கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்கப்பா!”

“அழாதக்கா. தந்தியை பார்த்ததும் இதோ கெளம்பிட்டேன். மாமனுக்கு ஒண்ணும் ஆகாதுக்கா. ஆஸ்பிட்டல் அக்கவுன்ட்சுல கேட்டு, நெட் மூலமா பணம் கட்டிட்டேன்”

“ஒறவுமொறையெல்லாம் இருந்தாலும் நீ வந்து பக்கத்துல இருந்தாதான் எனக்கு தைரியம். ஒன்னை படிக்க வெச்சவருடா! என்னை கை விட்ராதடா!”

நாலு மணி நேர ஆபரேஷன் முடிந்து ஐசியூவில் அட்மிட் செய்யும்வரை அவன் வரவில்லை. சி.ப்ளஸ்.ப்ளஸ் மற்றும் எம்.எஸ் விஷுவல் ஸ்டுடியோ ரெண்டையும் வைத்து அல்காரிதம் அமைக்க டெவலப்பர்களுக்கு க்ளாஸ் எடுத்துக்கொண்டிருந்தான்.

பனிரெண்டு மணி நேரம் ஐசியூவில் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்துவிட்டு வார்டுக்கு மாற்றிய பின்னர்கூட வரவில்லை. பல்வேறு ஃபிங்கர் பிரின்ட் சாதனங்களை இன்டர்ஃபேஸில் இணைத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் முழுக்க இறங்கிய க்ளூகோசை நிறுத்திவிட்டு ஜூஸும் கஞ்சியும் கொடுத்தபோதுகூட வரவில்லை. கம்பேரிஸன் பர்ஸண்டேஜ் சரிபார்த்துக்கொண்டிருந்தான்.

ரெண்டாம் நாள் முதல் விள்ளல் இட்டிலியை ஊட்டியதும் மென்று தின்றுவிட்டு அவள் கணவன் சொன்னார். “மேலப்புத்தேரி மாமன், பூதப்பண்டி சித்தப்பா, தக்கலை அண்ணன், பாரசாலை அத்தை, குளச்சல் சகலை இன்னும் யார் யாரெல்லாமோ ஹார்லிக்ஸு பாட்டில் கொண்டுவந்து அடுக்கியிருக்காங்க. பாத்து பத்திரமா எடுத்து வையி”

அவள் தம்பி அதுவரை பார்க்க வரவேயில்லை என்பதை நாசுக்காய் சுட்டிக்காட்டுவது தெரிந்து அவள் நெஞ்சு வலித்தது. தலை கட்டை பிரிக்காவிட்டாலும், அவராகவே எழுந்து நடந்து பாத்ரூம் போக ஆரம்பித்ததும் டாக்டர் டிஸ்சார்ஜிற்கு எழுதிக் கொடுத்தார். டேக்ஸியில் வீடு வந்து சேர்ந்ததும் கைத்தாங்கலாய் அழைத்துப்போய் படுக்க வைத்தார்கள்.

“திண்ணையிலேயே ஒக்காந்திரு தாயி! சாகக் கெடந்து பொழைச்சு வந்த வீட்டு மாப்பிள்ளையை, பொண்ணு கட்டுன வகையில மாமன் மச்சினன் எவனுமே பாக்க வரலைங்கற கொறையை உன் பொறந்தவன் வந்து தீர்த்து வைப்பான்”

நாலு நாளாய் புழுவாய் துடித்துக்கொண்டிருந்த மனசை, கணவனின் ஒவ்வொரு வார்த்தையும் கோணி ஊசியாய் குத்தியது.

திண்ணையில் படுத்திருந்தவளின் காலை நடுநிசியில் யாரோ அசைத்தார்கள். எழுந்தவளின் இரண்டு கைகளையும் பிடித்து கிழவி உலுக்கினாள்.

”தாரைவார்த்துக் குடுத்த கூடப்பொறந்தவளை உதாசீனம் பண்ணுன நாயி அந்தா வந்துகிட்டிருக்கு”

தூரத்தில் கார் ஹெட்லைட் தெரிந்தது.

“ஆத்தா மாருல உன்னோட எச்சிப்பாலு குடிச்சு கெடந்தவனை எடுத்து வளத்து ஆளாக்குனியே, அவனை நாலு வார்த்தை கேக்கரதுக்கு முன்னாடி ஒன்னோட நாக்கு மேலண்ணத்துல ஒட்டிக்குமில்லையா?”

அக்காக்காரி புடவையை இழுத்து சொருகி, மசுரையும் முடிந்தாள்.

“கொம்பு வெலகி வெலகிப் போனா, புள்ளைக்குட்டியை இழுத்துகிட்டு கொடி எங்க போய் விழும்? கெணத்துலதானே?”

எழுந்து நின்றவளின் நெஞ்சு ஆங்காரமாய் விம்மியது.

Isaipriya

”எத்தனையோ யுகங்கழிஞ்சு கெணத்துல இருந்து நல்லதங்கா எழுந்து வந்திருக்கா!!”

ரெண்டு கைகளிலும் ரெண்டையும் வாங்கிக்கொண்டு கார் வந்த திசை நோக்கி நடந்தாள். வண்டி கூப்பிடுதூரம் நெருங்கியதும் ஒண்ணரையடி ஒசரமுள்ள அந்த மரப்பாச்சிக் கட்டை, முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு போய் அவன் கன்னத்தை கிழித்தது. அதிர்ந்து நிறுத்தி, காரின் கதவு திறந்து அவளை நோக்கி நடந்து வந்தவனின் முன்னால் உயர்ந்திருந்த அவள் கரத்தில், கோடி வருட ஆத்திரத்துடன் கேணித்தண்ணியில் ஊறிய ஒரு செறுப்பு, வெறியுடன் ஆடிக்கொண்டிருந்தது.

- ஆங்கைஸ்நெட்

அகல்யா சேமித்த சிறுவாட்டுக் காசுகள்

January 16th, 2010 | angaisnet

இந்தச் சிறுகதை, ஒரு கன்ஸர்வேடிவ் வார இதழால் நிராகரிக்கப்பட்டது! :-(

புதுமுக எழுத்தாளர்கள், படிச்சு பாடம் கத்துக்கோங்க!

ஒரு சிறுகதையை “எப்படி எழுதக் கூடாதுன்னு” ஹாஹ்ஹாஹ்ஹா! ஆல் த பெஸ்ட்! :-)

———————————————

”ஹய்யோ, எல்லாரும் பாக்குறாங்க, கையை எடுங்க மாமா!”

”அட, ஏம் பொண்டாட்டி தோளைச் சுத்தி நா கை போட்டிருக்கறதை யார் பாத்தா என்ன?”

”இது ஓடும்போது பயமா இருக்குமா மாமா? வேணாம் எறங்கிடலாம் மாமா!”

”எக்சிபிஷனுக்கு வந்துட்டு ‘டோரா, டோரா’ வுல போகலேன்னா எப்டி அகல்யா? ஸேஃப்டி லாக் கைப்பிடி இருக்கு. என் கையை கெட்டியா பிடிச்சுக்கோ”

“அதானே! நீங்கதான் என் பக்கத்துலயே இருக்கீங்களே!”

”அதோ கோபுரம் தெரியுது பாத்தியா, அதுதான் கோட்டை மாரியம்மன் கோயில். இது ஓட ஆரம்பிக்கும்போது எல்லாரும் கை கூப்பி கும்பிடுவாங்க”

வீல் நகர ஆரம்பித்ததும் அகல்யா எம்பி இரு கைகளையும் அரோகரா போடுவதுபோல் உயர்த்தி, “ஆத்தா, காப்பாத்து!” என்று கத்தினாள்.

வேறு யாரும் கும்பிடவில்லை. எல்லோரும் சிரித்தார்கள்! அவள் கணவனும் ”ஹாஹ்ஹாஹா…!” என்று சிரித்தான்! அகல்யா அவனை சுளீரென்று தோளில் அடித்தாள்.

”கிராமத்துப் பொண்ணை தாலிகட்டி டவுனுக்குக் கூட்டி வந்து கேலி பண்றிங்களே மாமா?” அதற்குள் அந்த சுழல் ராட்டினம் வேகமெடுத்து, ஹைட்ராலிக் பிஸ்டன், தட்டின் ஒரு முனையை
‘பப்பரப்பா’ என்று தூக்கியது.

”அகல்யா, பயமாயிருந்தா கண்ணை மூடிக்கோ”

அதெல்லாம் வேலைக்காகவில்லை. ஸ்டார்ட் ஆன ரெண்டாவது நிமிடம் அகல்யா தன் கணவனை கட்டிக்கொண்டு டீஷர்ட் மார்பில் தன் முகம் புதைத்துவிட்டாள்!

”இதோ, இதுக்குத்தாம்மா ஆளுக்கு முப்பது ரூபா குடுத்து டிக்கெட் வாங்கினேன்!”

இறங்கியதும் அகல்யா தன் தலையைப் பிடித்துக்கொண்டு விட்டாள். கையில் தயாராய் வைத்திருந்த எலுமிச்சம்பழத்தை நசுக்கி, ஆழமாய் ஒருமுறை நுகர்ந்தாள். அவர்களுக்கு போன
மாதம்தான் கல்யாணமாயிருந்தது. ஒரே மாதத்தில் ‘வேறயா வெக்கறது’ என்று சாங்கியம் செய்து, டவுனுக்கு வந்து சொந்த வீட்டில் பால் காய்ச்சிவிட்டார்கள். முதன்முதலாய் இன்றுதான்
வெளியே வருகிறார்கள்.

பொருட்காட்சியில் கூட்டமான கூட்டம்!

சோடியம், சிஎஃப்எல் மின் விளக்குகளின் அபார வெளிச்சங்களில் கண்கள் விரிய வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள்! இப்போது கொஞ்சம் வெட்கம் விலகி, கணவனின் முழங்கையைப்
பிடித்திருந்தாள்.

”எவ்ளோ கடைகள் பாத்தியா அகல்யா? உனக்கு, எனக்குன்னு வாங்குன காலம் போயிருச்சு. இனிமே நமக்கு என்ன வேணும்னு பாத்து வாங்கு”

பெங்களூரு கெம்பேகவுடா வீதியில், ‘கிட்ஸ் கெம்ப்’ பொம்மைக் கடைக்குள் ஒரு குழந்தையை விட்டால் என்ன வாங்கும்? எதை எடுப்பது என்று தெரியாமல் மூச்சு வாங்கும்!! அதே மன
நிலையில்தான் அகல்யா இருந்தாள்!

“இதுக்குப் பேருதான் மிடில்க்ளாஸ் ஷாப்பிங். லட்சம் பொருளைப் பாத்துட்டு நாலு மட்டும் வாங்கறது”

அந்த நாலையும்கூட அவனேதான் வாங்க வேண்டியிருந்தது. ஹேங்கர்கள், ஸாட்டின் கோதடி விரிப்புகள், கேசரோல்கள், கட்லரி கலெக்‌ஷன், புத்தகங்கள் என்ற ரீதியில் அவன் வாங்கினான்.

ஆனால் அகல்யாவின் பார்வையெல்லாம் பஞ்சு மிட்டாய், டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ராஜம் சுக்கு காப்பி, டிசைனர் கோலம் போடும் டெம்ப்ளேட்டுகள் இவற்றின் பக்கம்தான்
இருந்தது.

”அதிகமா செலவு வெச்சு, கஷ்டம் குடுக்கறேனா மாமா?”

”மண்டு, நாம இன்னைக்கு பண்றதெல்லாமே அத்யாவசிய செலவுகள்தான். அம்மா தாயி! மிடில் க்ளாஸ் மென்டாலிட்டின்னாலே, கண்டபடி செலவு பண்றதுதான். கவலைப்படாதடா,
மாமாகிட்ட பணமிருக்கு”

ச்சாட் செண்டரில், ப்ளேட்டிலிருந்த புளித் தண்ணிப் பானியில் பாதி, அவள் சேலையில் வடிந்தது. ஆவி பறக்கும் ஆவின்பாலை பேப்பர் கப்பில் வாங்கி, ரெண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு,
ஊதி ஊதிக் குடித்தாள். ட்ராகன் ட்ரெயினிலிருந்து இறங்கி வந்த குழந்தைகளை கன்னம் பிடித்துக் கொஞ்சினாள்.

”அவ்ளோ ஆசையாடா செல்லம்? அடுத்த வருஷம் ஆடி மாசம் நம்ம குழந்தையோட வந்துருவோம்”

“ச்சீய்…! போங்க மாமா!”

“ஹேய் அகல்யா! இவ்ளோ கடைகளும், விளையாட்டுகளும் பெண்களையும், குழந்தைகளையும் மனசுல வெச்சுதான் டிசைன் பண்ணியிருப்பாங்க. பூராவும் கேர்ல்லி திங்ஸ்தான். நீ
கிராமத்துலயே வளர்ந்தவ. அக்கம்பக்கம் வீடுகள்ள பேசிப் பழக அரம்பிச்சதும் இதெல்லாம் பழகிடும்”

வனத்துறையில் நுழைந்து வெளிவந்தவளுக்கு ஆச்சர்யம்! வாட்டர் போர்ட் அரங்கின் முன்னிருந்த அரதப்பழசு ஐடியாவான மேஜிக் பைப்பில் தண்ணி வருவதைப் பார்த்து ”ஹை…!” என்றாள்.
ம்யூசிகல் ஃபவுண்டனில், நாஸில் முனையிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்ததும், திடீரென்று கிளம்பி அந்தரத்தில் சுழன்ற ரோஸ் கலர் பந்தினைப் பார்த்துக் கை தட்டினாள்!

சுற்றுலா, தோட்டக்கலை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை என்று ஒரு அரங்கத்தையும் விட்டு வைக்காமல் உள்ளே நுழைந்து நோட்டீஸ்களை அள்ளிக்கொண்டு வந்தாள். அஞ்சல் துறையில்,
க்யூவிற்கு இடைஞ்சலாக சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு, ‘சிறுவாட்டுக் காசுகளை’ போஸ்ட் ஆஃபீசில் எப்படி சேமிப்பது என்று பாடம் கேட்டாள்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் அரங்கத்தில் நுழைந்தவள், சிகப்பு கார்ப்பெட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டாள்! அந்த சிந்தி மொழி பேசும் பெண் சொன்னது என்ன புரிந்ததோ, சீயக்காய்
பவுடரும், ஊதுவத்தியும் வாங்கிவிட்டாள்.

”அவங்க கொழந்தையைப் பாத்தா பாவமா இருந்ததுங்க. பொம்பளைங்க எவ்ளோ கைவேலை பொருட்கள் செஞ்சு எப்படியெல்லாம் வியாபாரம் செய்யறாங்க பாருங்க!”

அவள் தோளைப் பிடித்துத் தூக்கி, முதுகைப் பிடித்துத் தள்ளி வெளியே கூட்டி வந்தான்.

”என்னங்க, ஊறுகாயின்னா எலுமிச்சங்காயும், நார்த்தங்காயும்தான் எனக்குத் தெரியும். இங்க பச்சை மிளகுலகூட கொத்துகொத்தாய் ஊறுகாய் இருக்கு பாருங்க!”

ராஜஸ்தான் ஊறுகாய்களில் நாற்பதையும் ருசி பார்த்துவிட்டாள்! தேர்ந்தெடுத்து வாங்கிய ஆறு வெரைட்டிக்கும், ஆறு பெட் பாட்டில் வாங்கினார்கள்.

காரில் திரும்பும்போது ட்ரைவ் பன்ணிக்கொண்டிருந்த கணவனின் மடியில் தலை வைத்து அகல்யா விசும்பினாள்.

“பட்டிக்காட்டுச் சிறுக்கியை கட்டிக்கிட்டு வந்து ராணி மாதிரி வெச்சுருக்கீங்க. சாவு பரியந்தம் நன்னியோட இருப்பேன் மாமா!”

”ச்சீ, கண்ணைத் தொடை. அதெல்லாம் தாலி கட்றதுக்கு முன்னால. ரிஜிஸ்டர் ஆஃபீசுல எப்ப கையெழுத்து போட்டோமோ அப்பலேர்ந்து எல்லாத்துலயும் சரிபாதி, சரிபங்கு, சம உரிமை.
என்னை நம்பி நீ வந்தே. உன்னை நம்பி நான் என்னோடது எல்லாத்தையும் ஒப்படைச்சிருக்கேன் அகல்யா”

ஒரு வாரமாக காலையில் அகல்யாவிற்கு அவன் சிரமமே வைப்பதில்லை. அவளுக்கு இன்னமும் டிஃபனெல்லாம் செய்ய கைவரவில்லை. காலையில் நேரமாக
எழுந்து சாப்பாடு, குழம்பு, ரசம், பொரியல் செய்து கேரியரில் போட்டுவிடுவாள். அவனுடைய பிரேக்ஃபாஸ்ட் நூடுல்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், ஓட்ஸ் எல்லாம் அவனே ரெடி பண்ணிக்கொள்வான்.

அன்றும் எட்டரையானதும், ஸ்வைன் ஃப்ளூவுக்கெல்லாம் பயப்படாமல், அவளிடம் ஒரு ‘உம்மா’ பெற்றுக்கொண்டு ‘பை’ சொன்னான்.

“அகல்யா, சாயந்தரம் வரும்போது காய்கறி ஏதாவது வாங்கி வரட்டுமா?”

”வேண்டாம் மாமா, வீதியில தள்ளு வண்டியில எளசா, ’தண்ணியாட்டமா’ காய் வருது. நான் வாங்கிக்கறேன். நீங்க சிரமப்படாம போயிட்டு வாங்க”

பத்தேகாலுக்கு காய் வண்டி வந்தது.

அந்த காய் வண்டிக்காரன், ஒரு வாரமாகத்தான் அந்தத் தெருவுக்கு வருகிறான். அகல்யா வீட்டு கேட்டுக்கு முன் வண்டி சொல்லி வைத்ததுபோல் நின்றது. விலை விசாரிக்காமல் அததில் கால்
கிலோ வாங்கினாள். நோட்டைக் கொடுத்தாள். மீதி சில்லரையை எண்ணிப் பார்க்காமல் வாங்கிக்கொண்டு உள்ளே போய் தாளிட்டுக் கொண்டாள்.

ஒரு நிமிடம் தாமதித்த காய் வண்டிக்காரன், சுற்றும் முற்றும் பார்த்தான். வண்டியின் கீழ்ப்புறமிருந்த பொட்டியைத் திறந்தான். ஒரு இத்துப்போன கித்தான் கோணி மூட்டையை எடுத்துத் தூக்கி
தோளில் வைத்துக்கொண்டான். இடது கையால் வீட்டின் கேட்டைத் திறந்தான். போர்டிக்கோவின் வலப் பக்கமிருந்த அண்டர் க்ரௌண்ட் கார் கேரேஜ் கதவின் தாழ் திறந்தான். உள்ளே போய்
மூட்டையை வைத்துவிட்டு வெளியே வந்தான். கேட்டை மூடினான். வண்டியைத் தள்ளிக்கொண்டு போய்விட்டான்.

அடுத்த பத்தாவது நிமிடம் யதார்த்தமாய் வெளியில் வந்த அகல்யா, கேரேஜின் முன் கதவைப் பூட்டிவிட்டு, பின்பக்கம் நடந்து சென்று பின் கேட் வழியாக கேரேஜினுள் வந்தாள்.

அந்த இத்துப்போன கித்தான் சாக்கு கோணி மூட்டையைப் பிரித்தாள்.

உள்ளிருந்த பொருட்களை சரி பார்த்தாள். யூஸி கார்பைன், 400 எம்.எம் எக்ஸ்டெண்டெட் பேரல் ஆட்டோமேட்டிக் மெஷின் கன் ஒன்று, மைக்ரோ யூஸி, 134 எம்.எம் சிறிய பிஸ்டல்
ஒன்று, பேரபெல்லம் கேலிபர் வகை தோட்டாக்கள், 16 ரவுண்ட், 50 ரவுண்ட் மற்றும் 100 ரவுண்ட் வெக்டார் ஆயுத மேகஸீன்கள், மொபைல் செட், இத்யாதி, இத்யாதி.

’சோனி எரிக்ஸன் டி.டு.எயிட்டி’ மாடல் செல்போனை எடுத்து ஆன் செய்து பேசினாள்.

”மாட்யூல் இன் ப்ளேஸ். மோல் இன் டென். லூப் எஸ்டேப்ளிஸ்ட். சங்கிலி கோர்க்கப்பட்டுவிட்டது”

“எக்ஸலண்ட் மிஸ். டிவோனா! வாழ்த்துக்கள். நேற்று உங்கள் எக்ஸிபிஷன் விடியோ பார்த்தேன். ’அகல்யா’ என்ற ரூரல் பெண் கேரட்டரில் கச்சிதமாக நடிக்கிறாய்”

”இதற்காக நம் டிபார்ட்மெண்ட்டில் எத்தனை பேர் எவ்வளவு நேரம் ஹோம் வொர்க் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும். நான் தனியளல்ல. இது ஒரு ஆபரேஷன்”

”ஆம், ஆபரேஷன் சேஃப் ஹவுசஸ்! ஹாஹ்ஹா!”

”சிரிக்கிறீர்கள். ஆனால், ஐ.ஏ.அஃப் ட்ரெய்னிங்கில் ஏ.எச் அருவத்திநாலு ரக மிலிட்டரி ஹெலிகாப்டரில் 90 மணி நேரம் பறந்திருக்கும் நான், பிசாத்து ‘டோரா டொரா’ வுக்கு
பயந்ததுபோல் நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

”எஸ்பியானேஜ் என்றாலே தியாகம்தான். நம் இரு நாடுகளின் பாதுகாப்புக்காக. நம் இரு நாடுகளுக்கும் பொது எதிரிகள் இருக்கிறார்கள் என்று உனக்கே தெரியும்”

”டெல் அவிவ் நகரத்தில் இந்திய, தமிழக வம்சாவளிப் பெண்ணாக, சாதுவாக படித்துக்கொண்டிருந்தேன். கிப்பட்ஸுக்கு அனுப்பி, ட்ரெயினிங் கொடுத்து, தென்னிந்தியாவில் ஒரு
உளவாளியாக்கிவிட்டீர்கள். ஒரு இளிச்சவாயனை என் கணவனாக்கிவிட்டீர்கள்.”

”உளவெல்லாம் நீ பார்க்க வேண்டாம். உங்கள் நாட்டு உளவுத்துறையின் மூக்கினடியில், அவர்களுக்கே தெரியாமல், ’பாதுகாப்பான வீடுகள்’ இந்தியா முழுதும் எங்களுக்குத்
தேவைப்படுகின்றன. டிவோனா, சமத்தாக சாம்பார் வைத்துக்கொண்டு ஹவுஸ் வைஃபாக இரு. தேவைப்படும்போது இந்த ’அகல்யா’ மாட்யூலை ஸ்லீப்பிங் மோடிலிருந்து விழிக்க
வைப்போம். எரட்ஸ் இஸ்ரியேல்!”

செல்லிடப்பேசியை அணைத்தாள் ’அகல்யா’ என்கிற டிவோனா!

- நவேஷ்

.

சில பின்னூட்டங்கள்

January 4th, 2010 | angaisnet

திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களும், கவிஞர் கனிமொழி கருணானிதி அவர்களும் இணைந்து நடத்தும் கருத்து.காம் வலைமனையில் 3000 கடிதங்கள், பதிவுகள் எழுதியிருக்கிறேன். நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களில் சில மட்டும் இங்கே!

** நவேஷ் என்கிற வெங்கடேஷ், ராமாயண வாலி போன்றவர். கொஞ்சம் ஏமாந்தால் எல்லோரையும் தூக்கி கடாசிவிட்டு செல்லும் எழுத்து நடையை கொண்டவர். ரொம்ப படித்தவர். புத்தகங்களையும், அனுபவங்களையும். கருத்து நதியில் ஓடும் வற்றாத ஜீவநதி. இவரின் வார்த்தைப் பிரயோகங்களுக்கு என்றும் அடிமை நான்.

- திரு. வெங்கி அவர்கள், கருத்து.காம்

** நவேஷ்! என்னான்னு சொல்வேனுங்க? கருத்தில் “ப்ளாக் ஹோல்” இவர்தான். இவரால் ஈர்க்கபடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எழுதும் போது எப்படி சுவையாக எழுதுகிறாரோ அப்படிதான் பேசும் போதும். பன்முக திறமை இவரிடம் இருக்கிறது. இவருக்கு தெரியாதது ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நல்லா எழுத நிறைய படிக்கணும் என்பதை இவரிடம் கற்றுகொண்டு இருக்கிறேன்.

- திரு ஓம்பிரகாஷ், கருத்து.காம்

** இதை ஏன் இத்தனை நாள் படிக்காமல் இருந்திருக்கிறேன்? நவேஷ், உங்கள் எழுத்தும் மொழி பெயர்ப்பும் என் நரம்புகளை சுண்டி இழுக்கிறது! தொடரக் காத்திருக்கிறேன்!

- ஓவியர் திரு ஜீவா அவர்கள், கருத்து.காம்

** நவேஷ், உங்கள் வலைதளமும் சென்றிருந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுடைய சில சிறுகதைகளில் உள்ள மண்வாசனை மற்றும் ஆழமான கருத்தும் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

– எல்லாம் மாயை, கருத்து.காம்

** சும்மா சொல்லக்கூடாது. கால சூழ்நிலையை கண் முன்னே கொண்டு வந்த அற்புதமான கற்பனை. ரசித்து படித்தேன்.

- திரு பி.ஆர்.எம்.ஒய், கருத்து.காம்

** நவேஷ், கனோஜி போர் மற்றும் அதில் உள்ள பிரமாஸ்திரங்கள் பகுதி! கற்பனை, கற்பனை. நன்றாக இருந்தது. நன்றாக சிரித்தேன்.

- திரு எல்லாம் மாயை, கருத்து.காம்

** கதைக்கு பாராட்டு எழுத அநுமதி வேண்டாம்னு நினைக்கிறேன்! உங்கள் தமிழ் நடை பிரமாதம்! கதை ஓட்டம், கால மாற்றம், நடை, விறுவிறுப்பு எல்லாம் ஒரு சிறு கதையில்!

- திருமதி சுஜாதாபெஹன், கருத்து.காம்

** நவேஷ்! கருத்தின் பாக்கியராஜ் மற்றும் காளிமுத்து! எதை சொல்ல வேண்டுமானாலும் ஒரு குட்டிக்கதையை சொல்வார். இவரது கன்னுகுட்டி கேட்ட கேள்விக்கு தாய்ப்பசுவுக்கு மட்டும் அல்ல நமக்கும் பதில் தெரியாது. அவ்வளவு கடுமையான கேள்விகளை எளிதாக நம் முன் வைப்பார்.

சிலரைப் பார்த்து நாம் எதற்காகவாவது பொறாமைப்படுவோம். இவரின் எழுத்து திறமையை பார்த்து நிறைய பொறாமை பட்டிருக்கிறேன். சமூக பொறுப்பு தனக்கு அதிகம் உண்டு என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பவர்.

- திருமதி கிரேஸ்ஜேம்ஸ், கருத்து.காம்.

** நவேஷ். வசீகரிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர், வசீகரிக்கும் சிரிப்புக்கும் சொந்தக்காரர், வசீகரிக்கும் பேச்சுக்கும் சொந்தக்காரர். கருத்துவின் நிரந்தர மேன் ஆப் த மாட்ச், கருத்துவின் போஸ்டர் பாய், கருத்துவின் வழிநடத்துநர்!

- திரு. ஹர்ரி, கருத்து.காம்

** நவேஷ் மிகச்சிறந்த சிந்தனையாளர்.
நீரோடையின் எளிமை, கடலின் ஆழம், புயலின் சீற்றம் என மூன்று உணர்வுகளையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர், இவரேதான்! வாழ்த்துக்கள்.

- திரு. ஆலம்ஷா கர்ணா, கருத்து.காம்

.

ஆதிவாசியின் ஆச்சர்யம்!

January 4th, 2010 | angaisnet

நான் எழுதி, இயக்கிய இச்சிறுகதையின் நாடக வடிவத்தினை, சேவாலயா மாணவ மாணவியர் மேடையில் நடித்தனர்.

“விகடன்” குழுமத்தின் “சுட்டி விகடன்” துவக்க விழாவில் இந்நாடகம் முதல் பரிசு பெற்றது! புகழ் பெற்ற நாடக இயக்குனர் திரு. வேலு சரவணன் அவர்கள் தேர்வு செய்தார்.

—————————————————

பாதையற்ற காட்டுக்குள் இருவரின் பூட்ஸ் ஒலி.

முன்னே சென்றவனின் கையிலிருந்த கத்தி, எதிர்ப்பட்ட செடி கொடிகளை சீவி அகற்றி, வழி செய்து கொண்டிருந்தது.

பின்னால் வந்த அமெரிக்கன் மெல்லிய குரலில் சொன்னான், “உன்னை நம்பிதான் வந்திருக்கிறேன். ஸ்பூர் எனப்படும் தடயங்களை வைத்து தடம் அறியும் உன் திறமை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது”

“என் அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு பணம் கொடுக்கிறீர்கள். ஏமாற்றமாட்டேன். இதோ, இந்த இடத்தில் மூன்று நான்கு தினங்களுக்கு முன் வேட்டை நடந்திருக்கிறது.”

“எதை வைத்துச் சொல்கிறாய்?”

“சிறு குருத்துக் கிளைகள் ஒடிந்து தொங்குகின்றன. கீழே சிறு செடிகள் மிதிபட்டிருக்கிறது பாருங்கள். இதோ, இங்குதான் வேட்டையை தோலுரித்து, பங்கு பிரித்திருக்கிறார்கள்”

“என்ன மிருகம்?”

“அது….. வேண்டாமே? பார்த்து நடங்கள். இன்னேரம் நம்மை உள்ளுணர்வால் உணர்ந்து, மோப்பம் பிடித்திருப்பார்கள்”

“அய்யோ? என்ன சொல்கிறாய்?”

“ஏன் சார் பயப்படுகிறீர்கள்? எனக்கு அவர்கள் மொழி தெரியும். ரிஸ்க் கொஞ்சம் அதிகம்தான்”

“உண்மைதான். அதெல்லாம் பார்த்தால் என் டாக்குமென்ட்ரி வெளியாகி, பரிசுகள் வென்று, புகழ் வெளிச்சம் என்மீது விழும்போது…. அந்த ஒரு கணத்திற்காகத்தான் இந்த உயிரையே பணயம் வைக்கும் ரிஸ்க்”

“இந்தத் தீவில் மனித நாகரீக இன்ப்ளுயன்ஸ் இல்லாமல் வாழும் பழமையான காட்டுவாசிகளைப் பற்றி, அவர்களுக்கு நீங்கள் நாகரீகத்தின் வாசனையை முதன்முதலாய் அறிமுகப்படுத்தி, அது உலகம் முழுதும் ஒளிபரப்பாகும்போது, என்னை மறந்துவிடாதீர்கள். எனக்கு…” என்றவனின் தோளை உரசிக்கொண்டு சென்ற முதல் அம்பு, பின்னாலிருந்த மரத்தில் குத்தி அதிர்ந்தது.

“சார்! வந்துவிட்டார்கள்! அசையாதீர்கள்!” என்றவன், உரத்த குரலில், ஏதோ கத்தினான்.

ஆறு முழு நிமிடங்கள் வண்டுகளின் ரீங்காரம், மர இலைகளின் சலசலப்பைத்தவிர மயான அமைதி.

கைட் திரும்பவும் மெதுவாக என்னவோ சொன்னான்.

புதர் விலக்கி முதல் ஆதிவாசி வெளிப்பட்டான். எபோனி கருப்பு. கட்டுமஸ்தான, கால கால வேட்டை அனுபங்களில் பெற்ற கீறல் காயங்களின் ஆறின அடையாளங்கள். நெற்றியில் மரப்பட்டையை சுற்றிக் கட்டி, ஒரு கொத்து பச்சை நிற இறகுகளைச் சொருகியிருந்தான்.

கைட் மெதுவே பின் வாங்கி, மர வேரில் அமர்ந்துகொண்டு, அமெரிக்கனுக்கும் சைகை காட்டினான்.

ஒவ்வொருவராய் வெளிப்பட, ஓரக்கண்ணால் அளவிட்டான், விபரீத்தத்தின் அளவை. ஏழு பேர் இருந்தனர். கைகளில் ஈட்டிகள். தோளில் வில், அம்பு.

ஒருவன் மரத்தை நெறுங்கி வரவும், அமெரிக்கன் உடல் நடுங்கியது.

“பயப்படாதீர்கள். ஒன்றும் செய்ய மாட்டார்கள். நான் சொல்லிவிட்டேன். என் பழைய நட்பை ஞாபகப்படுத்திவிட்டேன்.”

“பின் ஏன் என் தலைக்கு மேல் கையை நீட்டுகிறான், இந்த பத்து நாளைக்கு குளிக்காதவன்?”

“அவன் அம்பை எடுத்துக் கொள்வதற்காக. எய்த அம்பை எடுக்காமல் விட்டால், அது அவர்களின் எதிரியின் கைகளுக்குப் போய் இவனுயிரையே குடித்துவிடும்”

எல்லோரும் குத்திட்டு அமர்ந்தார்கள். ஒருவன் மட்டும் கைடிடம் சாவகாசமாய்ப் பேசினான்.

“நான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டேன். அவர்கள் ரசிக்கவில்லை. சூரியன் உச்சிக்கு வருவதற்குள் ஓடிவிட்டால் உயிரோடு விடுவதாகச் சொல்கிறான். சீக்கிறம் ஹேண்டிக்கேமை எடுங்கள். வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்யுங்கள். கேள்விகள் கேளுங்கள். நான் டிரான்ஸ்லேட் செய்கிறேன்”

“முதல் கேள்வி. சாப்டாச்சா?”

சிரித்தார்கள். பனிக்கட்டி முனையில் உடைந்தது.

“என்ன வேட்டைக்கு வந்தீர்கள்?”

“குறிப்பாக எதையும் தேட மாட்டோம். கிடைத்ததை அடிப்போம். எங்கள் பெண்களும் குழந்தைகளும் சேகரித்த பழங்களும், கிழங்குகளுமே ஏதேஷ்ட்டம். மாமிசத் தேவையின்றி, ஒரு முயலைக் கூட கொல்ல மாட்டோம்”

“நீங்கள் நர மாமிசம் சாப்பிடுவதாக….”

“ஆம். நீல முடிக்காரர்களை எங்கு பார்த்தாலும் அடிப்போம். எனவே அவர்களும் அனாவசியமாக எங்கள் பகுதிக்கு வர மாட்டார்கள். நாங்களும் போக மாட்டோம். தெரியாமல் யாராவது வந்து மாட்டிக் கொண்டால்….”

“நாங்கள் முந்திக் கொள்ளவில்லையென்றால் அவன் முடித்துவிடுவான். நிச்சயமக அவனை அம்பெய்திக் கொல்வோம்” என்றான் இன்னொருவன்.

“புதைப்பீர்களா, எரிப்பீர்களா?”

“இரண்டுமில்லை. கூறு போட்டு, பங்கிட்டு தின்றுவிடுவோம். அன்றிறவு, எங்கள் குடியிருப்பில் நடனமாடுவோம்” என்று குதித்துக் காட்டினான். எல்லோரும் சிரித்தார்கள்.

கைட் அமெரிக்கன் முகத்தையே பார்த்தான். “சார். வேறு கேள்விகள்? என்னவோ அவர்களுக்கு சைகை பாஷையில் பாடம் எடுக்கிறேன் என்றீர்களே?”

“அவன் இனத்தவன் மாட்டினாலே கொன்று தின்னும் பழக்கத்தைக் கேட்டதும் என் தண்டுவடம் சிலிர்த்துவிட்டது. போலீஸ் என்று கத்தினால், ஏழாயிரம் மைல் தாண்டிக் கேட்கவா போகிறது? போகலாம்”

எழுந்தவர்களை, இரு முரட்டுக்கரங்கள் அழுத்தி அமர வைக்கவும், இருவருக்கும் வேர்த்து ஊத்தியது.

“என் உடலின் முத்தின கறி, வேகாது, சப்பென்றிருக்கும் என்று இந்த மடையர்களிடம் சொல்”

“அதெல்லாமில்லை. அவர்கள் சிலவற்றை கேட்க விரும்புகிறார்கள்”

“அது கெட்டுது போ! அவன் கேட்டுத் தொலைப்பதை நீ மொழிபெயர்த்துத் தொலை”

“நீங்கள் உங்களுக்குள் சண்டை போடுவீர்களா?”

“போச்சுரா! நல்லா! சண்டைக்கென்ன குரைச்சல்?”

“உங்கள் கத்தி, ஈட்டி, வில், அம்பு, எப்படியிருக்கும்?”

“ச்சே, ச்சே! அதெல்லாம் வெச்சு சண்டை போட மாட்டோம்!”

“வேறு என்னதான் ஆயுதம் வைத்து சண்டையிடுவீர்கள்?”

“அணுகுண்டு என்று ஒன்று வைத்திருக்கிறோம். ஒரு பட்டனை அமுக்கினால், ஒரு சிட்டியே காலி! லட்சம் பேர் செத்துவிடுவார்கள்”

“………”

“என்னய்யா, முழிக்கறான்?”

“ஒரு ஆயுத்தத்தின் ஒரு வீச்சில், ஒரு லட்சம் பேர் இறந்துவிடுவார்களா?”

“அட ஆமாய்யா!”

“அப்போ, அந்த வாரம் பூரா உங்களுக்கு ஒரே விருந்துதான்னு சொல்லுங்க!”

“த்தூ, கெரகத்த! நாகரீகம் அடைஞ்ச நாங்க, மனுஷ மாமிசத்தை சாப்பிட மாட்டோம்!”

ஒட்டு மொத்தமாய் எழுந்து நின்ற ஏழு பேரில் ஒருவன் முன்னே வந்து கை நீட்டிக் கேட்டான்…..

“எ ன் னா தூ…! சா ப் பு ட மாட்டீங்களா…? அப்ப எதுக்குக் கொல்றீங்க?”

“……”

கடவுளின் கெஸ்ட் ஹவுஸ்

January 4th, 2010 | angaisnet
    இச்சிறுகதை, “தேவி வார இதழில்” வெளிவந்தது.

“அப்பா, இந்த ரோடு எங்கப்பா போகுது?” அந்தப் பெண் ஆர்வமாய்க் கேட்டாள்.

“போர்ட் பிளேர்ல ஆரம்பிச்சு அந்தமான் கடேசி வரைக்கும் போகுதுடா என் செல்லம்”

“அப்பா, இண்டியாவை விட இந்த கன்ட்ரி ரொம்ப அழகா இருக்குப்பா”

“குட்டிப் பொண்ணு, இதுவும் நம்ம இண்டியாதான் கண்ணா”

வியந்து போய் பஸ்ஸின் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

ஏழெட்டு டூரிஸ்ட் வாகனங்கள் அடர்ந்த காட்டின் ஊடே ஊர்ந்து கொண்டிருந்தன. பக்கத்தில் வந்த கையிட் கிசுகிசுப்பாய் சொன்னான்..

“ஸார், நடுக் காட்டுக்கு வந்துட்டோம். இங்கதான் நான் சொன்னேனே அது…”

“வேணாம் ஸார். எதுக்கு ரிஸ்க்?”

“நீங்க சும்மா இருங்க ஸார். அந்த எக்ஸ்பிரியன்ஸ் ஒரு லைப் டைம் அட்ராக்ஷன்!”

வாகனங்கள் ஓரமாக நிறுத்தப் பட்டன. காட்டின் ஒலிகள் தவிர மயான அமைதி.

கால் மணி நேரம் சென்றதும், டூரிஸ்ட்டுகளுக்கிடையே பரபரப்பு!

“அதோ அங்கே. வந்துட்டாங்க…”

“அப்பா யாருப்பா வந்துட்டாங்க?” சின்னப் பெண் கேட்டாள்.

“இந்தப் பகுதியில வாழற பழங்குடியினர். மில்லியன் வருஷமா நாகரீக தொடர்பே இல்லாதவங்க. சட்டை சொக்கால்லாம் போடமாட்டாங்க. நீ கண்ணை மூடிக்கோ. இந்த கையிட் நிறுத்தாதையான்னு சொன்னா கேக்கவே மாட்டான்”

ஆர்வமாய் எட்டிப் பார்த்த பெண் புதரிலிருந்து வெளியே வந்த அந்த இருவரையும் பார்த்தாள். எபோனி கருப்பில், ஒரு ஆதிவாசி சிறுவனும் சிறுமியும் கையில் வில்லுடன் வெளிப்பட்டார்கள்.

“யாரும் கீழே இறங்காதீங்க. இவங்க அப்பனும் ஆத்தாவும் பக்கத்துலதான் மறைஞ்சிருப்பாங்க. அம்பு உட்டாங்க, செத்தோம். ஆதிவாசிங்களை பாத்தாச்சின்னா கெளம்பலாம்”

சடுதியில் அந்தப் பெண் பஸ்ஸை விட்டு கீழே இறங்கி ஓடினாள். ஆதிவாசி குழந்தைகள் இருவரையும் நெருங்கி கன்னத்தில் முத்தம் கொடுத்து, கையில் மன்ச், பிஸ்கட், சிப்ஸ் பேக்கட் எல்லாம் திணித்துவிட்டு, ஓடி வந்து பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.

பொளேரென்று அறைந்த அவள் அப்பாவை கண்ணீருடன் முறைத்தாள்.

“சொன்ன பேச்சு கேக்க மாட்டே? அவங்க நம்ம தேசத்தோட சொத்து. ஒரு இம்யூனிட்டி எழவும் இல்லாத அவுங்களுக்குப் போய் எண்ணையில வருத்த சிப்ஸ்! ஷ்”ட்! நீ குடுத்த முத்தத்தால அதுங்களுக்கு கிருமி தொத்தி காய்ச்சல் வந்தா அவங்க எங்க அப்போலோவுக்கா போவாங்க?”

“கொழந்தைய அடிக்காதீங்க ஸார். டூரிஸ்ட் ஏரியாவிலேர்ந்து இந்த ஆதிவாஸிங்களை கவர்ன்மென்டுதான் தொரத்தணும் ஸார்”

“போடாங்க டுபுக்கு. யார் எடத்துலேர்ந்து யாரை தொரத்தரது? ஜீன்ஸ் போடாம, சமைச்சு திங்காம, முட்டுக் கல்லு போட்டு எடத்த வளைக்காம, எந்த வியாதியும் இல்லாம அக்கடான்னு வாழ்ந்தா அவன் காட்டு மிராண்டியா? சூது வாது தெரியாத அவனோட மூத்திரத்தை பிடிச்சி குடிங்கடா. ச்சே!. இங்க டூர் வந்த எம் புத்திய செருப்பால அடிக்கணும். கண்ணு, வலிக்குதாம்மா? சாமியே அவதாரம் எடுத்து வந்தாலும் நியூயார்க்கிலே தங்க மாட்டாரு கண்ணா. இதோ இங்கதான் தங்குவாரு. நாமளும் நம்ம நாகரீகமும்”

வாகனங்கள் மெல்ல புறப்பட்டன.

கொல்லிமலைக் காட்டின் அடிவாரத்தில்!

January 4th, 2010 | angaisnet
    இச்சிறுகதை, “குங்குமம் வார இதழில்” வெளியானது.

சனிக்கிழமை மதியம் காலேஜ் அமைதியாய் இருந்தது. லைப்ரரியிலும், சிஎஸ்ஸி லேபிலும் இருந்த ஒரு சில மாணவ மாணவியரும் கருமமே கண்ணாக இருந்தனர்.

பிரம்மாண்ட ரிசப்ஷனில் நடந்து வெளியே வந்துகொண்டிருந்தேன்.

“கேன் யூ ஸ்பேர் எ மொமன்ட் பார் மீ?” பெண் குரல் கேட்டுத் திரும்பினேன். “யெஸ்?”

“நான் புவனேஸ்வரி ஜெயிஸ்வால். ஐடி ப்ரொபஸராக இந்த காலேஜில் சேர்ந்திருக்கிறேன். நீங்கள் இங்கு ஸ்டாஃப்தானே?”

“ஆம், சொல்லுங்கள் மிஸஸ் ஜெயிஸ்வால். வெல்கம் டு டெமில்நாடு. வெல்கம் டு சேலம்”

“ஓ, தேங்க்யூ! வீ ஆர் பிரம், கொல்கட்டா, வெஸ்ட் பெங்கால். இது என் கணவர் ஷிவ்ராஜ். இது மூத்த மகன் விக்னேஷ். அவன் இளையவன், கார்திகேஷ். ஸ்டாஃப் க்வோட்டர்ஸ் கைட் செய்தால் போதும். ஐ கேன் மேனேஜ் எவ்ரிதிங் ஆஃப்டர் ஐ ஜாயின் தி டிபார்ட்மென்ட் ஆன் மண்டே!”

“ஷ்யூர்! ஒரு நிமிடம் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு, அதீத குண்டுப் பையனாய் இருந்த மூத்தவனைப் பார்த்துக் கொண்டே செல்லில் பிரின்சிபலைப் பிடித்தேன்.

“ஸார், மிஸஸ் ஜெயிஸ்வால்…..”

“ஆம். நல்ல வேளை நீங்கள் பார்த்தீர்கள். காலையில் வரச் சொன்னால் மதியம் வந்து…. சரி, பி ட்வெல்வ் க்வோட்டர்ஸ் வழி காட்டி விடுங்கள். ம்ம்ம்ம்….. வேறு மாநிலத்திலிருந்து குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள். ஐடியில் டாக்டரேட் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. எனவே…”

“சொல்லுங்கள் ஸார்.”

“இந்த இரண்டு நாட்களுக்கு வேறு உதவி தேவைப்பட்டாலும் செய். தென் ஷி வில் அடாப்ட். என்ன?”

“ஸெர்டென்லி, ஸார். தேங்க்யூ”

என் வீக்கென்ட் நாசமாய்ப் போனதைப் பற்றிக் கூட எனக்கு கவலையில்லை. அத்தனை ஜீராவுடன் ஆஃபர் செய்யப்பட்ட பெங்காலி ரசகுல்லாவைக் கூட நாசுக்காய் மறுத்துவிட்டேன். ஆனால்…..

ஞாயிரன்று காலை மிஸஸ் ஜெயிஸ்வால் செல்லில் கூப்பிட்டார்கள்.

“நந்தா, ஊரை விட்டு மூவாயிரம் கிலோமீட்டர் தள்ளி வந்திருக்கிறோம். ஹோம் சிக். பக்கத்தில் நல்ல கோவில் இருந்தால் சொல்லேன்?” சுத்தம்!

“போச்சுரா!”

“வாட்?”

“தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன். சென்று வாருங்கள்” என்று வெட்டி வுட நினைத்தாலும், குடும்பத்தோடு கால் டேக்ஸியில் வந்து ஹாஸ்டலில் ஹார்ன் அடித்தபோது தவிற்க முடியவில்லை.

“நந்தா, இங்கே ஊத்துமலை பாலமுருகன் கோயில் ரொம்ப விசேஷமாமே?”

நான் பதில் சொல்வதற்குள், டேக்ஸி டிரைவர், “ஆமாங்கம்மா! சீலநாயக்கன்பட்டி பைபாஸ்ல இருக்கு. மலை மேல தீர்த்தம் ஊத்து வடிவா இருக்கும்மா! போலாங்களா?”

வளைந்து நெளிந்து ஏறிய மலை உச்சியில் விளையாட நிறைய இடம் இருந்ததால், பையன்கள் ரெண்டு பேரும் குஷி ஆகி விட்டார்கள். அதுமட்டுமா? ஏராளமான குரங்குகள், முருகனுக்கு உகந்த மயில், செஞ்சேவல்கள், நிறைய ஆடுகள் ஆகியன கவடத்து திரிந்துகொண்டிருந்தன.

சடுதியில் கைடாக மாறிவிட்ட டேக்ஸி டிரைவர், “மொதல்ல சக்ரா தேவி போலாங்க” என்றார்.

ஸ்ரீ சக்ரம், அகத்தியர் பாறையில் செதுக்கியதாய் ஐதீகம். நிறைய முக்கோணங்களுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம்பிக்கையுமில்லை. ஒரு ஜெராக்ஸ் பிரதியை வாங்க ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டிய ஷிவ்ராஜ், மீதிக் காசை கையில் வாங்காமல் கரம் கூப்பினார்.

முறைத்த என்னையும், வாய் பிளந்த டிரைவரையும் தனியே அழைத்த மிஸஸ் ஜெயிஸ்வால், “தடுக்காதீர்கள். கேட்டால், அவர்கள் பிழைப்பது எப்படி என்பார்”

ஏறக்குறைய அதுதான் கடேசி வரைக்கும் நடந்தது.

கடையில் தனித்தனியே அர்ச்சனைத் தட்டுகள் வாங்கினார். “அவர்கள் பிழைக்க வேண்டாமா?”

ஆராதனைத் தட்டில் விபூதி எடுத்துக் கொள்வதற்குமுன், நூறு ரூபாய் தாளைப் போட்டார். “அவர்கள் பிழைக்க வேண்டாமா?”

உண்டியலில் பர்ஸிலிருந்து எண்ணாமல் எடுத்துப் போட்டார். “எவ்வளவு வசதிகள்? எவ்வளவு மெயின்டனென்ஸ்? அவர்கள் பிழைக்க வேண்டாமா?”

கண்முன்னே ஊத்து பெருகி வழியும் கிணறுகளில் ஐந்து ரூபாய் நாணயங்களை அள்ளிப் போடச் சொன்னார். “இத்தனை கிணறுகளின் சுற்றுப் புறத்தையும் க்ளீனாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் பிழைக்க வேண்டாமா?”

இப்படியே பக்கத்து மலையிலிருந்த சௌடேஸ்வரி அம்மனுக்கும், பெருமாளுக்கும் கல்மிஷமின்றி காணிக்கை செலுத்தினார்.

இத்தனையையும் புவனா மேடம் புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

க்வோர்ட்டர்ஸ் திரும்பி, கால் டேக்ஸியைக் கட் செய்தபோதுகூட, கிலோ மீட்டர் கணக்கெல்லாத்தையும் இடது கையால் ஒதுக்கி விட்டு, ரவுண்டாய்க் கொடுத்தார். “அவர் பிழைக்க வேண்டாமா?”

காலை பேப்பர் விழும் சத்தத்தக் கேட்டு நான் எழுந்து பார்த்தபோதுதான் கவனித்தேன். நீளமான க்வோர்ட்டர்ஸ் சாவி அருகே கிடந்தது.

ஒன்பது மணிக்கெல்லாம் காலேஜ் போய் ரிசப்ஷனில் கேட்டேன்.

“புவனேஷ்வரி ஜெயிஸ்வால்? அப்படி யாரும் வரவில்லையே நந்தா! ஹெச் ஆரில் கேளுங்கள்.”

“என்னய்யா விளையாடறயா? எங்க கிளியரன்ஸ் இல்லாம, இன்டர்வியூ இல்லாம, நாங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் குடுக்காம, ஒரு டாக்டரேட் எப்டிய்யா ஜாயின் பண்ண முடியும்?”

பிரின்ஸிபல் எகிறிவிட்டார் எகிறி!

“இர்ரெஸ்பான்ஸிபிள் ஆக்ட். நான் சொன்னதாய் பொய் வேறு சொல்கிறாய். இல்லாத ஒரு பெண்மணிக்கு நான் ஏன் போனில் க்வோர்டர்ஸ் கொடுக்கச் சொல்லப் போகிறேன்? பிராபர்ட்டி லாஸ் எதாவது ஆகியிருந்தாலோ அல்லது அவர்கள் ஏதாவது எடுத்துக் கொண்டு போயிருந்தாலோ நீதான் கம்பன்சேட் செய்ய வேண்டும். கண் முன்னே நிற்காதே, போ!”

என்னவொரு சோணகிரி நான்? இல்லத்தில் தங்க வைத்ததோடல்லாமல், எனக்குப் பிடிக்காத கோவில் குளம் என்று ஞாயிற்றுக் கிழமை பூரா சுற்றியிருக்கிறேன். ஷிட்!
“வர வர இந்த யு எஃப் ஓ அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்று வரும் வதந்திகள் அதிகமாகிவிட்டது”

“இந்த தடவை யார் பிட்டைப் போட்டது?”

“கூகிள் எர்த்தைவிட ஆயிரம் மடங்கு பவர்புல் நம்முடைய நாஸாவினுடைய எர்த் மானிட்டர். தென்னிந்தியாவில், நாமக்கல் மாவட்டதில், கொல்லிமலைக் காட்டின் அடிவாரத்தில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதை ரெண்டு கண்ணாலயும் பார்த்தோம் என்று, அங்கே முகாமிட்டிருக்கும் என் எஸ் எஸ் மாணவிகள் சத்தியம் பண்ணுகிறார்கள். பென்டகனிலிருந்து பாரு, பாரு என்கிறார்கள்”

“என்னத்தைப் பாக்குறது? வெளி கிரஹத்துலேர்ந்து வர்ரவன், நியூயார்க் வர மாட்டானா? கொல்லிமலைக்குத்தான் போவானா?” என்று சிரித்தவர்கள், எழுந்து கோக் குடிக்கப் போனார்கள்.

ஆத்திரம் தாங்காமல் சூரமங்கலம் ஸ்டேஷனில் போய் இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.

“கம்ப்ளெய்ன்ட்டா? காலேஜ் பிரச்சனை. பிரின்ஸிபால்தான் குடுக்கணும். வேணுன்னா என்னா நடந்ததுன்னு இவுருகிட்ட எழுதி குடுத்துடுப் போ”

நான் எழுதிக் குடுத்ததை ஒரு பார்வை பார்த்த கான்ஸ்டபிள், அதைப் பேரா பேராவாக, துண்டு சீட்டுகளாக கிழித்தபோது, மனசு வலித்தது.

“புவனேஷ்வரி, ஷிவ்ராஜ், விக்னேஷ், கார்திகேஷ்! வந்தாங்கன்ற. போய்டாங்கன்ற. எதுவும் திருட்டுப் போவலேன்ற. சப்பக் கேஸா இருக்கும் போலிருக்கே. வுட்டுத் தொலைக்க வேண்டியதுதானய்யா?”

பத்திகளை மாற்றி மாற்றி வைத்துப் படித்துப் பார்த்தவர் சொன்னார்.

“தமாசா ஒரு கற்பனை. சொல்ட்டா? சிவபெருமாளும், புவனேஸ்வரியும், புள்ளையாரும், முருகனும் வந்து ஒனக்கு காட்சி குட்துட்டு, அவங்களும் சாமி கும்ப்ட்டு போய்ட்டாங்க! போய் கொழுக்கட்டை தின்னுட்டு, வேலையைப் பாரு ஸார்”

டவுனில் க்ரைம் பிராஞ்சில் எனக்கு ஒருவரைத் தெரியும். அங்கே போலாம் என்று வண்டியை கிளப்பியவனை செல் சினுங்கல் ஈர்த்தது. குருந்தகவலை திறந்து படித்தேன்.

“நாங்கள் வந்த வேலை முடிந்தது. அதிகம் நோண்டாதே. நீ பிழைக்க வேண்டாமா?”

உரையாடல் கவிதை

December 19th, 2009 | angaisnet

நடுத்தர(வர்க)ம்

தாமரை தழை மீதான மெழுகுப்பூச்சில்
தாரையென நீரொழுகும் திவலைகள் ஒட்டாமல் உருளும்.
தடித்த தோல் நடுத்தரன் தாண்டியும் நடப்பான்
தீய்ந்த ஓலைப்பள்ளிச் சிறார் சுவரொட்டியைக் கடந்து.

சிறுவ சிறுமியர் மீதான பாலியல் கொடுமையை இந்த
தறுதலை சமூகம் முயக்கம் பழக்கவே
ஒருதரம் இருதரம் எனப் பலதரம் விட்ட ஏலத்தை
கலவரம் ஏதுமின்றி துறவறம் போலவே நடுத்தரன் சகிப்பான்.

கொழகொழ மாட்டு மலத்தினை பாலக தொழிலாளி வயலிடுதலை
வழவழ வேற்றுமொழி சஞ்சிகையால் கண் மறைத்து நடப்பான்.
‘தள்ளுங்கடா பயலுவளே’ என்று தொடாமை அங்கே துடுப்படிக்க
உள்ளங்கை நெய்வார, விடாமல் நாசுழிக்கும் இங்கே நடுத்தரம்.

குழவியை இழுத்தெறிந்த தாயின் கரங்களுக்கு கொஞ்சும்போது
குழந்தை நல்லது, கழிந்துவிட்டால் நரகல் பொல்லாததோ?
சாலையின் நடுவே சோலையை ரசிக்கும் இந்த நடுத்தரன்,
சேலையின் மறைப்பில் பிரசவ ஓலம் கேட்டு முகம் சுளிப்பான்.

விளிம்புநிலை மாந்தரை எரிக்கும் அநீதியெனும் தீ அடுத்த வீட்டில்!
குரலெழுப்பா நடுத்தரமே! குரட்டை விடும் நடுத்தரனே!
காத்திரு, அடுத்தது நீ! பாவம், வழி
பார்த்திரு! கெடுத்தது உன் நடுத்தர மனோபாவம்.

கீழ்தரத்தின் ஏழ்மையும், மேல்தரத்தின் ஏதேச்சையும்
கண்டும் காணாதது போலிருக்கும் நடுத்தரன் யார்?
கேட்டும் கேட்காதது போலிருக்கும் இந்த நடுத்தரன் யார்?

நான், நீ, அவன், அவள், அது!

- நந்தவேரன்

இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

அவளாக இருந்திருக்கலாம்

June 27th, 2009 | angaisnet
    இச்சிறுகதை, “உரையாடல் சிறுகதைப் போட்டியில்” ரூபாய் 1500/- பரிசு பெற்றது. “கிழக்குப் பதிப்பகம்” தொகுப்பிலும் இடம் பெற்றது.

நின்றிருந்த எல்லோருக்கும் ரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது. கம்பெனியின் ரீஜனல் மேனேஜர் பற்களைக் கடித்தபடி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

“பொருட்காட்சி ஆரம்பிக்க ஏழு நிமிஷம்தான்யா இருக்கு. எங்கய்யா நம்மளோட அழகான பிராண்ட் அம்பாசிடர் நடிகை?” லயசன் ஆஃபீசர் காதிலிருந்து கைபேசியை எடுக்காமல், ”வந்துகிட்டே இருக்காங்க சார். ஏதோ டிராஃபிக்ல கார் மாட்டியிருக்கலாம்” என்று கெஞ்சுகிற குரலில் சொன்னார்.

”காண்ட்ராக்ட்ல என்ன கண்டிஷன்?”

“எட்டு அம்பத்தைஞ்சுக்கு வரலைன்னா அக்ரிமெண்ட் கேன்சல் ஆயிடும் சார். இன்னும் ஒரு நிமிஷம்தான்… பாஸ்! மேடம் வந்துட்டாங்க!” ஓடிப்போய் டாட்டா இண்டிகாவின் கதவைத் திறந்துவிட்டார்.

முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி இறங்கினாள், துணை நடிகை சாஹித்யா. நடிகையைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது. ஷோரூம் ஊழியர்கள் எல்லோருக்கும் உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது! பணிவுடன் டிரேவில் வைத்து நீட்டப்பட்ட கத்திரியை எடுத்து இயந்திரமாய் ரிப்பனை வெட்டினாள்.

“ராகவன், கூட்டம் கலையறதுக்குள்ள அவங்களை நம்ம ப்ராடக்ட் பத்தி நாலுவரி பேசச் சொல்லுங்க!”

”வாட்? நான் பேசணுமா? முதல்ல எனக்கு எக்ஸ்ப்ளைண் பண்ணுங்க.”

ரீஜனல் மேனேஜர் தலையிலடித்துக்கொண்டார். “ராகவன், வாட் ஈஸ் திஸ்? நம்ம மெஷினோட கையேடுகள் போன வாரமே இவங்களுக்குக் குடுத்து க்ளாஸ் எடுத்தோமே? என்னய்யா உயிரை வாங்கறா இவ…?”

“மேடம் இது ஒரு எளிமையான வாஷிங் மெஷின். அவசரத்துக்கு நாலு துணி மட்டும் துவைக்கணும்னா முதல்ல ஒரு பக்கெட்ல துணிகளை வாஷிங் பவுடர் போட்டு ஊறவெக்கணும். அப்புறம்…”

அரைகுறையாய் காதில் வாங்கியபடி, “பை தி வே ராகவன், எனக்கு அசிஸ்டெண்ட்ஸ் யார் யாரு?”

“இவர் உங்க பாடிகார்ட் செக்யூரிட்டி மேடம். ரசிகர்கள் அத்துமீறாம இவர் பாத்துப்பாரு. இந்தப் பொண்ணு உங்க மேக்கப் டச்சப். மினரல் வாட்டர், ஸ்நேக்ஸ், ஜூஸ் எது வேணும்னாலும் இவங்களை கேளுங்க.” என்று வழிந்தார்.

“சரி சொல்லுங்க” என்றாள் நடிகை சாஹித்யா தன் கைக் கடிகாரத்தினை ஸ்டைலாகப் பார்த்தபடி. ”…இந்த ஹாண்டி மெஷினை பக்கெட்லயே பொருத்தி ஆன் பண்ணோம்னா பத்தே நிமிஷத்துல…”

“காண்ட்ரேக்ட்படி அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அஞ்சு நிமிஷம் எனக்கு ரெஸ்ட், இல்லியா?”

“…அது வந்து, ஆமாம் மேடம்” ராகவன் சொல்லிக்கொண்டிருக்க, மேனேஜர் ஓரமாய் ஒரு நாற்காலியில் போய் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

”ராகவன், இவன் யாரு?”

“இந்தப்பையனும் உங்களுக்கு உதவி செய்வான் மேடம். பேரு நந்தகோபால். மிஷினை இயக்கி, டெமோ காட்டுவான்.”

நடிகை சாஹித்யா, நந்தாவை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். நந்தாவுக்கு இந்த ரெண்டு நாள் துணிதுவைக்கும் வேலைக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். நல்லபேர் வாங்கினால் இன்னும் அஞ்சுநாள் வேலை கிடைக்கும். எப்படா டெமோ ஆரம்பிக்கும் என்று அவனுக்குள் பரபரப்பாக இருந்தது.

இதற்குள் அரைமணி நேரம் ஆகிவிட்டதால், மேக்கப் செட்டை எடுத்துக்கொண்டு சாஹித்யா அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுக்க உள்ளே போய்விட்டாள்.

பொருட்காட்சியில், இந்தக் கடைதான் வெறிச்சோடிக் கிடந்தது. குமாரபாளயம் ப்ரோக்கரிடம் ஒரு கிட்னியை விற்றுவிட்டு, தறி ஓட்ட முடியாமல் வீட்டுப் பாயில் சுருண்டு படுத்திருக்கும் ஏழை அப்பா, நந்தாவின் மனதில் ஒருமுறை வந்து போனார்!

சேல்ஸ் கவுண்டரைப் பார்த்தான். ஆர்டர்கள் ஏதுமில்லை. விற்பனை ஒன்றுகூட இல்லை! அவன் மனசாட்சியின் குரல் தெளிவாகவே கேட்டது! ‘நந்தா, இந்த சான்சை மட்டும் வுட்டே, …..க்காளி, உனக்கு சங்குதாண்டி!!!”

ஒரு முடிவுடன் மரத்தினாலான சின்ன மேடையில் ஏறினான். மைக்கைப் பிடித்தான். “ஹலோ, அந்த ஐவரி கலர் சட்டை போட்ட அஜீத்குமார் கொஞ்சம் திரும்புங்க!!” சிரிப்பு அலைமோதியது. “ஷாலினி மேடம், நீங்களும் வாங்க!” அந்தப் பெண்மணி, அநியாயத்திற்கு வெட்கப்பட்டாள்!

”சார், இந்தாங்க, எங்க ப்ராடக்ட் படம் போட்ட இந்த டிஷர்ட் உங்களுக்கு இலவசம்! இதைப் போட்டுகிட்டு ஜம்முன்னு கண்காட்சியை ஒரு ரவுண்ட் வாங்க! அதுக்குள்ள உங்க சந்தன கலர் சட்டையை நாங்க தொவைச்சு, காய வெச்சு, அயர்ன் பண்ணி வைக்கறோம். டெமோ பிடிச்சிருந்தா ஆர்டர் பண்ணுங்க.” பத்து நிமிடத்திற்குள் ஆறுபேர் சட்டையைக் கழட்டிவிட்டான். இளசுகளின் கர்சீஃப்களை ஏறக்குறைய பிடுங்கினான்.

சிடுசிடுவென்று வெளியே வந்த சாஹித்யா, குஷன் சேரில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டாள். தன் வாட்சில் பதிநேழாவது தடவையாக நேரம் பார்த்துவிட்டு, “காயத்ரீ, லெமொனேட் கொண்டு வா” என்றாள்.

நந்தா கடையின் முன்னே ”தகிட தகிட” வென்று பாடிக்கொண்டே சோப்புநீரில் துணிகளை முக்கினான். ”…இல்லாத இடுப்பால இடிக்காத, நீ என்ன!” என்று இடுப்பை ஆட்டிக்கொண்டே, மெஷினின் அஜிடேட்டர் எப்படி ரெண்டு திசைகளிலும் சுற்றி துணிகளைத் துவைக்கிறது என்று கூட்டத்திற்கு காட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தில் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

கடேசியில் பளிச்சென்ற சந்தன நிற சட்டையை எடுத்து, “….எப்ப்ப்ப்ப்ப்பூபூபூடீடீடீ….” என்று நாலா திசையிலும் சுழன்று காட்டினான். கைத்தட்டல் பின்னியது. செக்யூரிட்டி, விசிலடித்தான்! ”எமகாதகன் சார்! ஒன்பதரைக்குள்ள மொதல் மிஷினை வித்துட்டான்! ஒரு டஜன் ஆளுங்க சட்டையைக் கழட்டிக் குடுத்துட்டு, டெமோ பாக்க ஆவலா காத்திருக்காங்க!”

சாஹித்யா எலுமிச்சை ஜூசைக் குடித்தபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

வழவழா வண்ண விளம்பரக் கையேடுகளை, நந்தா ஓடி ஓடி விநியோகித்தான். வேண்டாம் என்று மறுத்தவர்களை, “…..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!…” என்று கத்தி சிரிக்க வைத்தான். ஒருவர் தன் சட்டையைக் கழட்டவும், அவரது பையன் தன் சட்டையையும் பேண்டையும் கழட்டி நந்தாவிடம் கொடுத்துவிட்டான்! ஜட்டியுடன் நின்ற மூணு வயசு வாண்டை அவன் அம்மா ரெண்டு மொத்தினாள்.

“பயல் எள்ளுன்னா எண்ணையா நிக்கறானே? அப்படியே அவன் அப்பாவைக் கொண்டிருக்கான்” என்று நந்தா மைக்கில் சொல்லவும், ஒரே களேவரமாகி கூட்டத்தில் ரகளையாகிவிட்டது! ரீஜனல் மேனேஜர், கண்ணில் நீர்வழிய சிரித்துக்கொண்டிருந்தார்!

சாஹித்யா ராகவனைக் கூப்பிட்டு, “நாலு மணிக்கு முடிஞ்சுடுமா? மார்னிங் எனக்கு ஷூட் இருக்கு. ஐ ஹேவ் டு பேக் அப்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

திய உணவு இடைவேளை வரை பதிமூணு மிஷின் விற்பனையாகி இருந்தது. நாற்பது பேருக்குமேல் தங்கள் முகவரி, தொலைபேசி எண்களை பதிவு செய்திருந்தார்கள். ஒரு வாரம் கழித்து ஞாபகப்படுத்தினால் வாங்கிக்கொள்வார்கள்.

லஞ்ச் டேபிளில் பேப்பர் நேப்கினை நாசுக்காய் எடுத்த சாஹித்யா, “மெனு நான் அப்ரூவ் பண்ணதுதானே?” என்றாள். க்ளியர் சூப்பில் ஆரம்பித்து, காஜுகதலி, சாலட், தந்தூரி நான், கடாய் க்ரேவி, பிரிஞ்சி, வெள்ளரி ரெய்தா, இத்யாதி, இத்யாதி தாண்டி, ஐஸ்க்ரீம் டெஸர்ட்டில் அவள் லஞ்சை முடித்தபோது, மணி ரெண்டேகால் ஆகிவிட்டது.

திரும்ப வந்து உட்கார்ந்தபோது கூட்டம் சாஹித்யாவைப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் தன் உள்ளங்கையிலிருந்த சக்கரையில் நனைத்த ஸ்வீட் ஜீராவை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்!

நந்தா லஞ்சுக்குப் போகவில்லை. அவ்வப்போது ஒரு மரவள்ளி சிப்சை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மேடைக்கு வந்துவிடுவான். ”கூட்டம் கொஞ்சம் குறையட்டும் சார். அப்புறம் சாப்புடறேன்.”

கூட்டம் குறையவே இல்லை. நந்தா போட்ட ஆட்டத்தில் சோப்புக் குமிழிகள் எல்லோர் மேலும் தெரித்தது! பக்கெட் வாஷிங் மெஷின் படமும், முகவரியும் போட்ட நூறாவது டீஷர்ட்டை அவன் ஒரு காதல் ஜோடியின் கையில் திணித்தபோது, ராகவன் மேடையேறி நந்தாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்!

திரும்பி சேல்ஸ் சார்ட்டைப் பார்த்தான். ப்ச்ச! விற்பனை நாப்பத்து ரெண்டுதானா? வெறியுடன் திரும்பி, “கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால் உங்க தோழி உங்களைப் பாக்கும்போது அழுக்கு சட்டை போட்டிருந்தா எப்படி ப்ரதர்? மெஷினே ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் பாஸ்! பேச்சுலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!” என்று ஒரு காலேஜ் மாணவனின் மூலமாக, விடுதி மாணவர்களின் ஈமெயில் டேட்டாபேசையே பிடித்துவிட்டான்!

நடிகை சாஹித்யா ”ஒரு அரைமணி நேரம் முன்னாடியே நான் போகலாமா?” என்று கேட்டபோது பதில் சொல்ல அருகில் யாருமில்லை. பில்லிங் பிரிண்டரில், க்யூ அதிகமாகி ஜாம் ஆகிவிட்டது! கையினால் ரெண்டு பெண்கள் பில் போட வேண்டியதாகிவிட்டது. கையேடு பாம்ப்லெட் கட்டுகளை பிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

ட்டரைக்கு ஷட்டர் மூடியபோது, விற்பனை செஞ்சுரியைத் தாண்டியிருந்தது. ”ஒரு வார டார்கெட்ல பாதியை மொதல் நாளே கிராஸ் பண்ணிட்டோம்யா. நந்தா, நாளைக்கு நீ டெமோ பாய் இல்லை. சேல்ஸ் எக்சிக்யூடிவ்! அதான்யா உன்னோட டெசிக்னேஷன்! இந்த வாரம் பூரா உனக்கு வேலையிருக்கு.”

நந்தாவின் மனக்கண்களில், அவன் ஏழை தாவணித் தங்கை சைக்கிளில் காலேஜ் போக ஆரம்பித்தாள்!

அந்தக் கல்லூரி ஆடிடோரியத்தினுள் நந்தா நுழைந்து மேடையேறி கை கூப்பியபோது, மேனேஜ்மெண்ட் மாணவ மாணவியர் சுமார் ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

“ஆரம்பத்தில் ஒரு சாதாரண டெமோ பையனாக ஆரம்பித்த நான், இன்று உங்கள் முன் மாநிலத்தின் விற்பனை மேலாளராக, கம்பெனியின் ஒரு பார்ட்னராக நிற்கிறேன் என்று சொன்னால், அதற்கு வெறும் உழைப்பு மட்டும் காரணமல்ல. நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் ரெண்டு பேர் மீதும் நாம் செலுத்தும் நேர்மையான அன்பு, செய்யும் தொழிலில் சிரத்தை, உள்ளார்ந்த ஆர்வம், ஆகியவைதான் காரணம்”

தன்னுடைய முதல் நாள் பொருட்காட்சி அநுபவத்தினை காமெடியாக விவரித்தார். மாணவர்கள் ஆர்ப்பரித்தனர். “இதோ, என்னுடைய இந்தப் பதவியில் அமர்ந்திருக்க வேண்டியவள் அவளே! எனவே, அந்த நடிகையைப் போல பலர் தவறவிட்ட வாய்ப்புகளை நாம் பற்றிக்கொள்ளும்போதுதான் நம் வெற்றிக் கதைகளை இப்படி பகிர்ந்துகொள்ள முடியும். ஆல் தி பெஸ்ட்!” என்று முடித்தான்.

மெமெண்டோ கொடுக்க வந்த மாணவி, “சார், அந்த நடிகை கடேசில என்ன சார் ஆனாங்க?” என்று காதருகில் வந்து மெல்லிய குரலில் கேட்டாள். நந்தா தன் பர்சை எடுத்து ஒரு செய்திக் குறிப்பைக் காட்டினார். “டி.வி. நடிகை சாஹித்யா தொழிலதிபரை மணந்தார்” என்று பழுப்பு கலரில் இருந்தது.

நந்தா அந்த மாணவியின் காதருகில் போய், “பரஸ்பரம் வாய்ப்புகளை தட்டிப் பறித்த நாங்கள், ஒருவரை ஒருவர் இனிமையாக பழிவாங்கிவிட்டோம்! இப்போ அவங்க, மிசஸ் சாஹித்யா நந்தகோபால்!”

- நந்தவேரன்

‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது